Coimbatore News : நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா மீண்டும் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் பல்வேறு புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இரவு நேரங்களில் உணவகங்களின் செயல்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இரவு உணவு உண்பதற்காக வந்த நபர்களை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் இரவில், உணவகத்தின் ஷட்டரை மூடிவிட்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இரவு நேர பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் உள்ளே வந்து அங்குள்ள அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறியதோடு, அங்கிருந்த ஆண் வாடிக்கையாளர்களை லத்தியால் அடித்து வெளியே அனுப்பும் காட்சிகள் அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. அப்படி அடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பெண்ணின் தலையில் தவறுதலாக அந்த லத்தி பட, அந்த பெண் வலியால் மேசையில் சாய்ந்தார்.
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் அமைந்துள்ள வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஸ்ரீராஜா என்ற ஹோட்டலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த காவலர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதாக அப்பெண் பிறகு வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அவர் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவிலும் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக காவல்த்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரத்திற்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் கோவை காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil