கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மலுமிச்சம்பட்டியில் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி உள்ளது. இது அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரியாகும். அதே வளாகத்தில் அதே நிர்வாகத்தின் சார்பிலான சுய நிதி இன்ஜினியரிங் கல்லூரியும் உள்ளது.
மாணவன் குத்தி கொலை
நேற்று மீலாது நபியை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இரு கல்லூரியை சேர்ந்த ஹாஸ்டல் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்தனர். காலை 10 மணியளவில் இரு கல்லூரியை சேர்ந்த இரு தரப்பு மாணவர்களிடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் சுய நிதி கல்லூரியை சேர்ந்த முதலாமாண்டு சிவில் படிக்கும் மாணவர் அஷ்ரப் முகமது (18). கத்தியால் குத்தப்பட்டார்.
இவர் திருச்சியை சேர்ந்த ஆரிப் முகமதுவின் மகன். படுகாயமடைந்த அஷ்ரப் முகமதுவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே அஷ்ரப் முகமது இறந்தார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். இரு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்தனர். இதில் அஷ்ரப் முகமதுவை குத்தி கொலை செய்தது தொடர்பாக 3 மாணவர்களை கைது செய்து மாஜிஸ்திரேட்முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.