Kongu Nadu : புதிதாக விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ”கொங்கு நாட்டில்” இருந்து எல். முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சமூக வலைதளங்களில் கொங்கு நாடு குறித்து விவாதங்கள் நடைபெற துவங்கியது. திமுக - காங்கிரஸ் கூட்டணி, பாஜக தமிழகத்தை இரண்டாக பிரிக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டின.
கொங்கு நாடு என்பது தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளை குறிப்பிடுகிறது. இது அதிமுகவின் பலம் அதிகமாக இருக்கும் பகுதிகளும் கூட. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக கொங்கு நாடு என்ற பகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் முருகன் நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரை அடுத்து அந்த பதவிக்கு வந்துள்ள கே. அண்ணாமலையும் அதே பகுதியில் இருந்து வந்தவர். இது முக்கியமாக கவுண்டர் சமூகத்தின் கோட்டையாக அறியப்படுகிறது - மாநிலத்தில் ஒரு சக்திவாய்ந்த, பணம் மற்றும் அதிகாரமிக்க ஓபிசி சமூகம். மாநில அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர்களின் பட்டியலின் ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பல முக்கிய நபர்கள் பாஜக மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது… இதுபோன்ற அறிக்கைகள் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. தமிழகம் இப்போது ஒரு அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பாக உள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
தமிழகத்தை பிரித்து யாரும் ‘கொங்குநாடு’ அமைப்பது சாத்தியமில்லை. அது நடந்தால், அது ஒரு முன்னுதாரணத்தை அமைத்து, இதுபோன்ற பல மாநிலங்களை உருவாக்க வழிவகுக்கும். சொந்த நலன்களைக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அதற்காக அழுத்தம் கொடுக்க விரும்பினாலும், தமிழகத்தைப் பிரிப்பது என்பது சாத்தியமற்ற கனவு. மக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இத்தகைய பிரிவினைவாத கருத்துக்களுக்கு இங்கு இடமில்லை. ”தனிமரம் தோப்பாகாது” என்பது தமிழர்கள் பழமொழி. தமிழர்கள் வாழ்ந்தால், நாம் ஒற்றுமையுடன் வாழ்வோம். பாஜகவின் இந்த எண்ணம் வெற்றி பெறாது. அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
திமுக மத்திய அரசு என்று மோடி அரசை அழைப்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்று அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பயன்படுத்துவதற்கு எதிர்தாக்குதலாக கொங்குநாடு என்ற பதம் மத்திய அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றதாக பலரும் கூறுகின்றனர். கொங்குநாடு என்ற பதம் குறித்து பாஜக மாநில செயலாளர் கரு. நாகராஜனிடம் கேள்வி எழுப்பிய போது, மக்களின் எண்ணம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
மற்ற மாநிலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. தெலுங்கானா ஒரு உதாரணம். ஒன்றிய அரசைப் பற்றி பேசும் போது அது அவர்களின் விருப்பம் என்றால், கொங்குநாடு என்று அழைப்பதும் மக்களின் விருப்பம் என்று கூறினார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தை இரண்டாக பிரிக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. பின்னர் ஞாயிற்றுக்கிழமை நாகராஜன், ‘கொங்குநாடு’ குறித்து பாஜகவில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று கூறினார்.
இது சாதாரண சமூக ஊடக விவாதங்கள் தான். இந்த விவாதத்தின் துவக்கம் எங்கே ஆரம்பமானது என்பதும் எனக்கு தெரியவில்லை. கொங்குநாடு குறித்து பேசும் தமிழக கட்சிகள், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணிகளுடன் நெடுங்காலமாக பயணித்து தற்போது ஒன்றிய அரசு என்று கூறுகின்றனர். பாஜகவில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் மக்களின் விருப்பம் இது போன்ற பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று கூறினார்.
கொங்குநாடு என்று கூறும் போது ஏன் இது திமுக அச்சம் கொள்கிறது. தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது. உத்திரபிரதேசத்திலும் இது நிகழ்ந்தது. மக்கள் அதனை விரும்பினால், அதனை நிறைவேற்றுவது அரசின் கடமையாகும் என்று திருநெல்வேலி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.