சீனா கப்பலில் சென்னை வந்த பூனை : கொரோனா பீதியால் திருப்பி அனுப்ப 'PETA' எதிர்ப்பு
செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகள் COVID-19 வைரஸ் பரப்பப் படிவதில்லை என்று பல்வேறு சுகாதார அமைப்புகள் தெரிவிப்பதாகவும் PETA சுட்டிக்காட்டியுள்ளது
சீனாவில் 2019-ல் டிசம்பர் 31 அன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. 2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரின் கடல் உணவு சந்தையில் முதன்முறையாக காணப்பட்ட இந்த வைரஸ் மிகக் குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு பரவியது. இதுவரை, இந்த வைரஸால் 3000 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.
Advertisment
இதுவரை இந்தியாவில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, 20 நாட்களுக்கு முன்பு, சீனாவில் இருந்து வந்த சரக்குப் பெட்டகத்தில் (Container) பூனை ஒன்று சென்னை துறைமுகத்திற்கு வந்தது. இந்த பூனையை மீண்டும் சீனாவிற்கு திருப்ப அனுப்ப சென்னை துறைமுக அதிகாரிகள் முடிவு செயதுள்ளனர்.
இந்நிலையில், இந்த பூனையை சீனாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கைவிடுமாறும், பூனையை விடுதலை செய்யுமாறும் PETA என்கிற அமைப்பு சென்னை துறைமுகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
PETA தனது கடிதத்தில், பூனைகள் COVID-19 வைரசை பரப்பாது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும், இந்த பூனை சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டதற்கான ஆதாரம் என்ன? தண்ணீர், உணவு ஆகாரம் இல்லாமல் ஒரு பூனை எப்படி சீனாவில் இருந்து சென்னைக்கு எப்படி உயிருடன் வந்திருக்கும் என்று கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகள் COVID-19 வைரசை பரப்புவதில்லை என்று பல்வேறு சுகாதார அமைப்புகள் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுவாக, சீனாவிலிருந்து வரும் கப்பல்கள் சிங்கப்பூர், கொழும்பு போன்ற நாடுகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வந்தடையும். பொருட்களை ஏற்றுவதற்காக சரக்குப் பெட்டகம் அவ்வப்போது திறக்கப்படுவதுண்டு. எனவே, பூனை எந்த இடத்தில் கப்பலுக்குள் நுழைந்திருக்கலாம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று PETA குறிப்பிட்டுள்ளது.