கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான ஊரடங்கு ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயில், பஸ் என பொதுபோக்குவரத்துகள் துவங்கப்பட்டுள்ளன.
பொதுபோக்குவரத்துக்காக, 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பஸ் சேவைகள் துவக்கப்பட்டுள்ளன. 4 சிறப்பு ரயில்கள் இயங்க துவங்கியுள்ளன. இந்நிலையில், சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு வரும் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட் வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல விரும்புவோர், இ- பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, https://tnepass.tnega.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா சோதனைகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது, பொது போக்குவரத்து வசதிகளுக்காக, மாவட்டங்கள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் இ-பாஸ் பெறுவது அவசியமாகியுள்ளது. அவர்கள் இ-பாஸ் பெற்றவுடன் அவர்களது விபரங்கள், அந்தந்த மாநில ஆட்சியர்களின் பார்வைக்கு சென்று விடும். அவர்கள் தங்களது ஊரை அடைந்தவுடன் நேரடியாக சோதனைக்கு அழைத்து செல்லப்படுவர்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும், கொரோனா தொற்று இல்லாதவர்கள், வீடுகளிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்கள், பணம் கட்டி மையங்களில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களது உடல்நிலை, அந்த 7 நாட்களிலும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு 48 மணிநேரத்தில் திரும்ப உள்ளவர்களுக்கு இந்த தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விமானம், ரயில் மூலமாக தமிழகத்திற்கு வருபவர்கள், முன்னதாகவே இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்று உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கும், தொற்று இல்லாதவர்கள், வீடுகளில் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகளில் தனி அறை இல்லாதவர்கள், 7 நாட்கள் கட்டணம் செலுத்தி தனியார் மையங்களிலும், அடுத்த 7 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.