கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருக்க, இன்னொரு சமூகம் துக்கத்தில், துயரத்தில், வேதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த பெரும் சமூகம் தங்கள் திருமண நாளை எதிர்நோக்கி இருக்கும் யங் கப்புல்ஸ் சமூகமாகும்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, வெளிநாடுகளில் இருந்து எந்த விமானமும் இந்தியாவில் தரை இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்ச் மாதத்தில் திருமணம் செய்யக் காத்திருந்த பல மாப்பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தது எப்படி?
மார்ச் மாதத்தில்,
2020 மார்ச் 5 வியாழன் (வளர்பிறை)
2020 மார்ச் 6 வெள்ளி (வளர்பிறை)
2020 மார்ச் 12 வியாழன்
2020 மார்ச் 13 வெள்ளி
2020 மார்ச் 22 ஞாயிறு (வளர்பிறை)
2020 மார்ச் 30 திங்கள்
ஆகியவை சுபமுகூர்த்த தினங்களாகும்.
அதாவது, பிரதமர் மோடி இன்று (மார்ச் 22) அறிவித்த மக்கள் ஊரடங்கு நாளும் சுபமுகூர்த்த தினமாகும். இன்று மட்டும் தமிழகத்தில் ஏகப்பட்ட திருமணங்கள் நடப்பதாக இருந்தன.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இன்று காலை 10 மணிக்கு திருமணம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே பத்திரிகை அடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஆனால், நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க, திருமணம் வீட்டாரே வேறு வழியின்றி, வெளியூர்களில் இருப்பவர்கள் வருவதை தவிர்த்தாலும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று மனநிலைக்கு வந்துவிட்டனர். உள்ளூர் சொந்தங்கள் மட்டும் திருமணத்திற்கு வந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்த சூழலில், நேற்று விஏஓ அலுவலகத்தில் இருந்து பேசிய அதிகாரிகள், இன்று காலை 6 மணிக்குள் திருமணத்தை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று சொல்ல, தற்போது நேரத்தையே மாற்றி திருமணம் செய்திருக்கின்றனர்.
இது போன்ற பல சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்க, நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று நொந்து போயுள்ளனர், மண வாழ்க்கை கனவோடு காத்திருக்கும் தம்பதிகள்.
வரும் மார்ச் 30ம் தேதி சுபமுகூர்த்த தினமாகும். திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வந்தால் போதும் என்று பலரும் விமான டிக்கெட் புக் செய்திருந்த நிலையில், விமான சேவையே ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது வெளியூரில் வேலைப் பார்ப்போரின் நிலை என்றால், உள்ளூரில் இருப்பவர்களின் நிலை அதைவிட பரிதாபமான சூழலில் உள்ளது. மண்டபம் புக் செய்து, பத்திரிகை கொடுத்து, உணவு ஆர்டர் கொடுத்து, எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் கண் முன்னே ரெடியாக இருந்தும், திருமணத்தை நடத்த முடியாத சூழல் நிலவுவதால், அந்தந்த குடும்பங்களே இடிந்து போயிருக்கின்றன.
இதுகுறித்து, நந்தம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திருமண திட்டமிடல் நிறுவன தலைவர் விவேக் ஆனந்த், இந்த மாதத்தில் கடைசி நிமிடத்தில் இரண்டு திருமணங்கள் ரத்து செய்ய வேண்டியிருந்தது என்கிறார்.
"திருமணத்தை திட்டமிடப்பட்ட தேதியில் நடத்த எவ்வளவோ முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வரவிருந்த பல விருந்தினர்கள் வர முடியாமல் போனதால், இயல்புநிலை திரும்பும் வரை, தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது. அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் போன்றவற்றை இன்னும் பிற்காலத்திற்குப் பயன்படுத்தலாம் என்றாலும், கடைசி நிமிட ரத்து என்பது அதிக இழப்புகளைச் சந்திக்கிறது. நிச்சயமாக நாங்கள் இதற்கு கட்டணம் வசூலிக்கவில்லை, ஏனென்றால் இது எதிர்பாராதது" என்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.