கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் புதிதாக மேலும் 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை தினமும் மாநிலத்தின் கொரோனா வைரஸ் தொற்று விவரம், உயிரிழந்தோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட 38 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனாவால் இன்று உயிரிழந்தோர் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 38 பேரில் 16 நோயாளிகள் தனியார் மருத்துவமனையிலும் 22 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்த 38 பேரில் சென்னையில் மட்டும் 31 உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. சென்னயை அடுத்து இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 178 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 81 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு புறம் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கணிசமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திருப்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,676 என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.