கருப்பு பண சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது அளிக்கபட்ட புகாருக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது.
வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக கருப்பு பணம் மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறையினர் சென்னை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த புகார் மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ள புகார் மனுவை மனுதாரர்களுக்கு வழங்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சுந்தரேசன் ஆஜராகிவாதிட்டார். ஆனால் வருமானவரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எழும்பூர் நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனு இன்னும் வழக்கு எண்ணிடப்பட்ட படவில்லை நம்பர் ஆன பிறகே மனுதாரர்களுக்கு புகார் மனு நகல் வழங்கப்படும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த புகார் மனுவுக்கு எதிராக தடை விதிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.