Covid19 second wave spike steeper in semi-urban areas Tamil Nadu : திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை 714 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் இது புதிய உச்சமாக கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் தூத்துக்குடியிலும் அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 594 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெருநகர் பகுதிகளைக் காட்டிலும் இம்முறை சிறுநகரங்களில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது என்பதை நமக்கு தரவுகள் தெளிவுப்படுத்துகிறது.
சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் 18% கொரோனா தொற்று கடந்த 20 நாட்களில் அதிகரித்துள்ளது. ஆனால் சிறுநகர் பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 22% நோய் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மட்டும் 193 கொரோனா தொற்று மார்ச் மாதம் முழுவதும் பதிவான நிலையில் ஏப்ரலில் 5657 வழக்குகள் பதிவாகியுள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றாமல் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள் தான் கிராமப்புறங்கள் மற்றும் சிறுநகரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்று தெற்கு மாவட்டங்களுக்கான சுகாதாரத்துறை அதிகாரி கூறினார். இப்பகுதிகளில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று கூற வேண்டும். மேலும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பலர் மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். தேர்தலுக்காக அவர்கள் வந்து சென்றதும் கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் இவ்விரு மாவட்டங்களிலும் 13% நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது சென்னையைக் காட்டிலும் அதிகமானது. நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
திருப்பூர் போன்ற தொழில்நகரங்களிலும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மிக அதிக அளவில் தொற்று ஏற்பட்டாலும் அதனை கையாள போதுமான அளவு உள்கட்டமைப்பு நம்மிடம் இருப்பதால் யாரும் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil