நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்ற ரசிகரை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கண்டித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்ட ரஜினி, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை என்ற ரஜினி புரூஸ்லி(45 வயது). கூலித்தொழிலாளியான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் திவ்யா என்ற மகளும், வசீகரன் என்ற மகனும் உள்ளனர்.
தீவிர ரஜினி ரசிகரான அவர் ‘நாட்டுக்கொரு நல்லவன்’ என்ற பெயரில் ரசிகர் மன்றம் நடத்தி வருகிறார். மன்ற தலைவர் என்பதால், கடந்த 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.
அப்போது அவரது உறவினர்களும் நண்பர்களும், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லையே என்று அவரை கேலி செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி மகேஸ்வரி, வீட்டிலிருந்து வெளியே சென்ற நேரம் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிக்கிடந்தார்.
வீட்டுக்கு வந்த மகேஸ்வரி, ஏழுமலை மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அலறி துடித்தார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தன்னுடைய அபிமான நட்சத்திரம் அரசியலுக்கு வரவில்லை என்பதற்காக ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற செயல்களை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Suicide because your favourite star doesn't enter politics??? ????this Trend is scary to say the least, it's tough but surely one day all this must come to a halt.
— Ashwin Ravichandran (@ashwinravi99) 15 December 2017
அஸ்வின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து அவர் டிவிட்டரில் கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.