Advertisment

நீதிபதிகள் குறித்து விமர்சனம்: அக்.,4-க்குள் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கருத்து சுதந்திரம் என்பதின் பேரில் நீதிபதிகளையும் நீதித்துறையும் விமர்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE, Central government,

நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் கண்டனம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் நீதிமன்றத்தை விமர்சனம் செய்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே, நீட் தேர்வு குறித்த வழக்கு ஒன்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த போது, ஆசிரியர்களின் போராட்டத்துக்கு நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும். நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதி அப்போது எச்சரித்தார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருபாகரனை இணையத்தில் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சிகள், அரசு பள்ளிகள் தரம் உயர்த்த குரல் கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிபதிகள் குறித்து இணையத்தில் விமர்சித்தவர்களை யார் இயக்குகிறார்கள் என கண்டறிய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு பதிலளித்தது.

இதைக்கேட்ட நீதிபதி, கருத்து சுதந்திரம் என்பதின் பேரில் நீதிபதிகளையும் நீதித்துறையும் விமர்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியதுடன், போராட்டக் காலத்தில் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நீதிபதிகள் குறித்து இணையத்தில் விமர்சித்தவர்கள் மீதி எடுக்கப்பட நடவடிக்கை என்ன? என்பது குறித்து வருகிற அக்டோபர் மாதம் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

Chennai High Court Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment