கடலூரில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மழை பொழிவு ஏற்பட்டு வருகின்றது.
பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதனிடையே, கடல் சீற்றத்தின் காரணமாக நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க நேரிட்டது.
இந்த நிலையில், கடலூரில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டதனால், 49 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதேபோல, புதுச்சேரியிலும் கடல்சீற்றம் ஏற்பட்டதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக, 100க்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.