கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளூர், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று சார்ஜாவிலிருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பயணிகள் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 6 பேரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களின் உடல் மற்றும் ஆசனவாயில் மறைத்து வைத்து 3.54 கிலோ எடையிலான சுமார் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கடலூரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை