Dalits prevented from entering temple : விழுப்புரம் மாவட்டம் விழுக்கம் என்ற பகுதியில் பட்டியல் இன சாதியினர் கோவிலுக்கு சென்று திரும்பிய பிறகு கோவிலை சுத்தம் செய்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி அன்று அப்பகுதியை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். பிறகு அந்த கோவில் சாதி இந்துக்களால் சுத்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக புகார் செய்த நிலையில் காவல்துறையினர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தீவனூர் பகுதியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் பல தரப்பட்ட மக்களும் ஒன்றாக வசித்து வருகின்றனர். 2013ம் ஆண்டு இந்த பகுதியில் சேலையம்மன் கோவில் ஒன்று கட்டப்படும் வரை அனைத்தும் அமைதியான முறையிலேயே இருந்தது. ஊர் பொது நிலத்தில் பட்டியல் இன மக்கள் தவிர்த்து இதர நபர்களிடம் இருந்து நிதி பெற்று கோவிலை கட்டினார்கள்.
2016ம் ஆண்டு இந்த கோவில் கட்டுவதற்காக ரூ. 1 லட்சத்தை கோவில் நிர்வாகத்திற்கு பட்டியல் இன மக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை சாதி இந்துக்கள் வாங்க மறுத்துவிட்டனர். உங்களின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மறுத்ததோடு, ஏப்ரல் 29ம் தேதி கோவில் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் எங்களை உள்ளே அனுமதிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார் உள்ளூர்வாசி.
சேலையம்மன் தெய்வமே ஒரு தலித் தெய்வம் என்பதால், அவருக்கு வழங்கப்படும் பூஜைகளை முதலில் பட்டியல் இன மக்கள் தான் துவங்கி வைப்பார்கள். இது இந்த மாவட்டம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் ஒன்று. இருப்பினும் இப்பகுதியில் சாதி இந்துக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் அவர்.
இது தொடர்பாக வழக்கு ஏதும் பதியவில்லை. இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டியுள்ளோம் என்று திண்டிவனம் டி.எஸ்.பி. கணேஷன் கூறியுள்ளார். விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் இது தொடர்பாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பேசியுள்ள நிலையில், இந்து அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் கொண்டு வரப்படும் என்றும் அரசின் கண்காணிப்பின் கீழ் இக்கோவில் விளங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil