அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மாநிலங்களின் கருத்து கேட்காமல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் என கூறப்படுகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இது தொடர்பான அம்சங்களை எதிர்த்தார்.
எனினும் அதை பொருட்படுத்தாமல், அணை பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘ஜூன் 13-ல் மத்திய அமைச்சரவை அணை பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வரைவு மசோதா மாநில அரசுகளுக்கு தரப்படவில்லை. மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா உள்ளது.
எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்து, மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே மசோதாவை கட்டாயமாக்க வேண்டும். ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்.
அணைகள் பாதுகாப்பு வரைவு மசோதாவின் அம்சங்களுக்கு முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால், தமிழக அரசு எதிர்த்த அம்சங்கள் திருத்தப்பட்டதாக தெரியவில்லை’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.