கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மண்டலத்தில் வசிக்கும் மக்களின் சொத்து வரி செலுத்தும் விவரத்தை வெளியிட்டிருந்தது. இதுவரை சொத்து வரியை செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ககன்தீப்சிங் பேடி இதைப்பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை மாநகராட்சியின் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ருபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதத்தை 25-150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.
600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25% சொத்து வரி உயர்த்தப்பட்டது. 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்பட்டது.
2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர்த்தப்பட்ட சொத்து வரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.