அமைச்சர் ஓ.எஸ் மணியனுக்கு எதிராக முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நாகை மாவட்டத்தை சேர்ந்த கிள்ளை ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் திமுக மாவட்ட நிர்வாகியாக இருந்து வருகின்றேன். என்னுடைய முகநூல் பக்கத்தில் தமிழக கைத்தறி துணி நூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியின் அடிப்படையில் நான் கருத்து தெரிவித்திருந்தேன். அந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பக்கிரிசாமி சீர்காழி காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்தனர்.
குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் படி புகார்தாரர் சரியான நபர் கிடையாது. புகார் அளிக்க அவருக்கு அடிப்படை முகந்திரம் இல்லை. எனவே அந்த புகாரின் படி பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, மனு தொடர்பாக நான்கு வாரத்தில் சீர்காழி காவல் துறை ஆய்வாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.