ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பலரும் தங்கள் பணத்தை இழந்தவர்கள், அதனால் கடனாளி ஆகி நெருக்கடியில் சிக்கி விரக்தி அடைந்த பலரும் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் பலரும் ஈடுபட்டனர். ஆன்டலைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து பெரும் கடனாளியான வங்கி ஊழியர் கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்து கொன்றதோடு, அவருடைய மகன் மற்றும் 1 வயது குழந்தையையும் கொன்று அவரும் தூக்கிட்டு தற்க்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இப்படி, தினம் தினம் ஆன்லைன் சூதாட்டத்தில் பலரும் தங்கள் பணத்தை இழந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி என்கிற ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்களின் தற்கொலை தொடர்கதையானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனா் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனா்.
முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியா் மணிகண்டன் தனது குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அதிமுக அரசு தடை விதித்து இருந்தது. நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இந்தச் சூதாட்டத்தை சட்டம் இயற்றி தடை செய்ய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படக்கூட இல்லை. உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்காமல், ஏற்கெனவே உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவது தான் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீா்வு ஆகும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.” என்று கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் அதிஷா நவம்பர் மாதம் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் உடனடியாக தடை செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள், ஒன்று ஆன்லைன் ரம்மி, மற்றொன்று அநியாய வட்டி வாங்கும் கடன் செயலிகள், பல்வேறு குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவரத் தொடங்கிவிட்டன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது நம்பிக்கை உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுங்க ப்ளீஸ்” என்று பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் அபிலாஷ், ஃபேஸ்புக்கில் அதிஷாவின் பதிவுகளை பகிர்ந்து ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில், “நேற்று கூடத்தான் ஒரு செய்தியைப் படித்தேன். தமிழ்நாட்டில் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் நிறைய பணம் இழந்து அதனால் பெரும் கடனாளி ஆகி, பதற்றத்தில் சமநிலை இழந்து கிரிக்கெட் மட்டையால் தன் மனைவியின் மண்டையை அடித்து உடைத்து கொன்று விட்டு, தன் இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு தானும் தூக்கு மாட்டிக் கொண்டார். சூதாட்டத்துக்கு எதிராக ஒரு பெரும் போராட்டம் வெடிக்க வேண்டும். சூதாட்ட விளம்பரங்களை அனுமதிக்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
அவ்விளம்பரங்களில் நடிக்கும் நட்சத்திரங்களை சமூக விலக்கம் செய்ய வேண்டும். மகிழ்ச்சியா இருப்பது எப்படி, யோகா பண்றது எப்படி எனப் பேசும் சாமியார்கள், மதத்தலைவர்கள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகப் பேச வேண்டும். நாம் கடுமையான அழுத்தத்தை அரசு மேல் செலுத்த வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.