கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 17ஆம் நாள் ஆழ் கடல் தங்கல் மீன்பிடி தொழிலுக்கு இயந்திர படகில் 8 மீனவர்கள் சென்றனர்
அப்போது, .குமரி மீனவர்கள் சென்ற படகு கடல் எல்லையை தாண்டி இந்தோனேஷியா கடல் பரப்பு பகுதிக்கு சென்றுவிட்டதாக, அந்த நாட்டு கடற் படையால் படகும் அந்த எட்டு குமரி மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
குமரி மீனவர்கள் எட்டு பேர் இந்தோனேஷியா சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களில் நான்கு மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் எஞ்சிய மீனவர்கள் தூத்தூரை சேர்ந்த மரிய ஜெசின் தாஸ்(33) ,பூத்துறையை சேர்ந்த இம்மானுவேல் (29), திருவனந்தபுரம் வெட்டுதுறையை சேர்ந்த சிவனின் (29) மன்னாட்டு பகுதியை சேர்ந்த ஜோமோன் (24) ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் மரியஜெசின் தாஸ் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், மே 20ஆம் தேதி மீனவர் மரியஜெசின் தாஸ் மரணமடைந்தார். இந்தத் தகவல் தூத்தூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்.மரணம் அடைந்த மீனவரின் பூத உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆசாரிபள்ளம் மருத்துவ மனை மருத்துவர்களால் மீனவர் மரிய ஜெசின் தாஸ் யின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, மே மாதம் 23ஆம் தேதி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் மத சடங்குகளுக்கு பின் தூத்தூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
நித்திரைவிளை காவல் நிலையத்தில் மீனவர் மரணம் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை உயிரிழந்த மீனவரின் உடற்கூராய்வு அறிக்கை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகம் காவலர்களிடம் உடற்கூராய்வு அறிக்கை வழங்கப்பட்டுவிட்டது எனக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர். அதன்பின்பு, ஆட்சியரின் உத்தரவுக்கு பின்பே சம்பந்தப்பட்ட நித்திரைவிளை காவல் நிலைய அதிகாரிகள்.உடற்கூறு சான்றை கொடுத்துள்ளார்கள்.
அந்த அறிக்கையில் மீனவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மீனவரை இந்தோனேசிய அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியிருப்பது தெரியவருகிறது.
எனவே சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிய வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு, குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்திற்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
செய்தியாளர் த.இ.தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.