சென்னை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகள் டெங்கு, கொரானா போன்ற வைரஸ்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி 2018-ம் ஆண்டு வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கை, டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுவை கண்டறிந்து ஒழிப்பது, சுகாதாரத்தை பின்பற்றாத வீடுகளுக்கு அபராதம், டெங்கு உயிரிழப்பு போன்றவை குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 11) தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சூரியபிரகாசம் கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், கொரனா வைரஸ் தாக்குதலை தடுக்க எடுக்கபட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் 2075 பேர் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும், தினமும் 70 முதல் 80 வீடுகள் என்ற கணக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்திலிருந்து முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் திட்டமிடல்கள் சரியாக உள்ளதாக தெரிவித்ததுடன், அந்த திட்டமிடல் எவ்வாறு செயல்படுத்தபடுகிறது என்பது குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் டெங்கு, கொரானா போன்ற நோய் பரப்பும் வைரஸ்களை தடுப்பதற்கு தற்போதுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக உள்ளதா? என்பது குறித்து இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.