வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 22) காலை வலுவிழக்கும். தமிழகம் - புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
தென் கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய ராயலசீமாவில் ஓரிரு இடங்களில்
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23-ம் தேதி வட கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழ்நாடு-புதுச்சேரி, தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயல்சீமாவில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து தமிழகம் - புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்தது. நள்ளிரவு வரை காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரத்தை தக்கவைத்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil