இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் கருத்தை கேட்குமாறு, உச்சநீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி நேற்று (வியாழக்கிழமை) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் கருத்தை கேட்குமாறு, உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேவியட் மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்தார்.
தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து யார் மனு தாக்கல் செய்தாலும் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்க கேவியட் மனுவில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என, டிடிவி தினகரன் கூறியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.