அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணத்தின் விலையை தமிழக அரசு நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) அதிரடியாக உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்த ஒரு வாரத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி தமிழக அரசு சாமானிய மக்களுக்கு தமிழக அரசு சுமையை ஏற்படுத்துவதாக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
6 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வு குறித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான் என கூறியுள்ளார். சென்னையை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.