நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார்.
அதன்பின், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தினமும் தினகரனை சந்தித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், தினகரன் திடீரென நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க அவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி சென்ற தினகரன் நேற்று இரவு சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து, பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் இன்று தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.