பயங்கரவாதிகள் பிரச்னையில் மாநில அரசை எச்சரித்தீர்களா? என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனிமொழி கேள்வி விடுத்துள்ளார்.
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னையில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் நீர்நிலைகளை தூர்வாரி வருகிறார். அரசு எதுவும் செய்யவில்லை.
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சலுகை குறித்து கர்நாடக அரசின் நடவடிக்கையை பொறுத்து இருந்து பார்ப்போம்.
போலீஸ் மானிய கோரிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சென்னையில் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களும் வேலை செய்யாமல் இருந்திருக்கின்றன.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி ஏன் பேச வில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க.வை கேட்கிறார். எதிர்க்கட்சியை விட மத்திய அரசுக்குதான் பயங்கரவாதம் பற்றி தெரிய வரும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு துறை இருக்கிறது. எனவே தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து மாநில அரசிடம் எடுத்துரைத்து அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.