கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் செல்போன்களை, வெள்ளியன்று டெல்லி போலீசார் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, அவரது போன்களில் உள்ள அழிக்கப்பட்ட தடையங்கள் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதனிடையே, தினகரனுக்கு எதிரான இந்த லஞ்ச வழக்கு தொடர்பாக, நத்து சிங் என்கிற நரேஷை, டெல்லி விமான நிலையத்தில் வைத்து கடந்த வியாழன்று இரவு போலீசார் கைது செய்தனர். அவரை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுகேஷுக்கு 1 கோடி ரூபாய் பணத்தை இவர் கொடுத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
அதேபோல், சுகேஷையும் மே 12 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டிருந்தார். நீதிமன்ற காவலில் எடுப்பதற்கு முன்னர், போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் சந்திரசேகரிடம் சில கேள்விகள் கேட்டனர். அதன்பின், அவர் காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும், அந்த ஒரு கோடி ரூபாய் பணம், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்தது என போலீசார் கூறுகின்றனர்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தினகரனிடம், தேர்தல் ஆணையத்திற்கு பணம் கொடுக்க முற்பட்டது குறித்து தொடர்ந்து 4 நாட்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது. "ஹவாலா ஏஜென்ட் நரேஷ், சாந்த்னி சவுக் பகுதியில், இயங்கி வந்ததாகவும், சென்னையில் இருந்து ஒருவர் மூலம் பணத்தைப் பெற்று, அந்த பணத்தை இடைத்தரகர் சந்திரசேகரிடம் அவர் கொடுத்ததாகவும்" தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள 'அந்த' நபருக்கு தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா தான் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தினகரனுடன் கைது செய்யப்பட்ட மல்லிகார்ஜுனாவின் போலீஸ் காவலும் மே 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.