கந்துவட்டி கொடுமைக்கு எதிராக இயக்குநர் சுசீந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கந்துவட்டி கொடுமை தாங்காமல் நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து, தன் குடும்பத்துடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார். இதில், அவரின் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இறந்துவிட, உயிருக்குப் போராடி வருகிறார் இசக்கிமுத்து.
தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம். கந்துவட்டி கொடுமைக்கு எதிராகப் பல்வேறு குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘கொலைகாரன்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கந்துவட்டி ஒரு பாவச்செயல். கந்துவட்டி ஒரு பெருங்குற்றம். கந்துவட்டி மனித நேயமற்ற செயல். கந்துவட்டி கொலைக்கு நிகரான செயல்.
கந்துவட்டிக்காரன் மனித உணர்வுகளையும், மனித உயிர்களையும் உறியும் ஒரு அட்டைப்பூச்சி. இவனைவிட மோசமானவன், அயோக்கியன் யார் என்றால், இவர்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும்தான்” என கூறப்பட்டுள்ளது.