Diwali festival bus reservation: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் இதன்மூலம் ரூ.2.55 கோடி வசூல் ஆகியுள்ளதாக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசுப் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளான தீபாவளி மற்றும் பொங்கல் விழாக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் நல்ல முறையில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிட ஏதுவாக போக்குவரத்துத்துறையின் சார்பில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து துறையின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே.நகர் பேருந்து நிலையம், ஆகிய 5 இடங்களில் அக்டோபர் 24 முதல் 26 வரை தினசரி இயங்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்ற நாட்களுக்கும் 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. திருப்பூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1165, மற்றும் 920 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக பயணிகள் பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்ள நடைமுறயில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள பேருந்து முன்பதிவு வாயிலாக இதுவரையில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 33,870 பயணிகளும், பிறா ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 17,338 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் ஆக மொத்தம் 51,208 பயணிகள் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர் என்றும் இதன்மூலம் ரூ2.55 கோடி வசூலாகியுள்ளது என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.