“ஆடாம ஜெயிச்சோமடா… நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா… ஓடாம ரன் எடுத்தோம்… சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்” என்ற பாடலுக்கு ஏற்ற நிகழ்வு சினிமாவிலும் விளையாட்டிலும் மட்டுமல்ல அரசியலிலும் நடந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் எதிர்த்து யாரும் போட்டியிடாததால், திமுக சார்பில் 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு இடங்களில்கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. அந்த கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் பேரூராட்சியில்தான் திமுக ஆடாமலேயே ஜெயித்திருக்கிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்பதால், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிவடைந்ததையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அந்த பட்டியலின்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட பல வார்டுகளில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இறுதிப் பட்டியல் வெளியாகும்போது இந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆளும் திமுக பெரும்பான்மை பலத்துடன் தலைவர் பதவியைப் பிடிக்கலாம்.
வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்ததையடுத்து, திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக இடையே எட்டு முனைப் போட்டி நிலவிய போதிலும் 12,738 பதவிகளுக்கு 75,000க்கும் குறைவான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த கோவை மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுகவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்திருக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாகவே திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 8 வேட்பாளர்கள் போட்டியின்று தேர்வாகி உள்ளனர். இதனால், திமுக நெகமம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை உறுப்பினர்களின் பலத்தைப் பெற்றுள்ளது. நெகமம் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்களுக்கு ஆடாமலே ஜெயிச்சோமடா என்ற பாடல் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நெகமம் பேரூராட்சியில் இந்த 8 வார்டுகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். நெகமம் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 9 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதில் 8 பேர் திமுக வேட்பாளர்கள். அதிமுகவைச் சேர்ந்த ரவி ராமசாமி மற்றொருவர். ஒரே பேருராட்சியில் 8 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி இருப்பது கவனத்தைப் பெற்றுளது.
உண்மையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆடாமலேயே ஜெயிச்சோமடா என்ற பாடல் நெகமம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களுக்கு அப்படியே பொருந்தும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.