ஜெ. வழக்கு பற்றி ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார்: வழக்கறிஞர் ஜோதி
முன்னாள் முதல்வர் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்து வரும் ஆ. ராசாவை கட்சியிலிருந்து உடனடியாக மு.க.ஸ்டாலின் நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
2ஜி ஊழல், சர்க்காரியா ஆணைக்குழு, ஜெயலலிதா சொத்து வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் மூன்று நாட்களில் தன்னை அழைத்து விவாதிக்க வேண்டும் என ஆ. ராசா சவால் விடுத்திருந்த நிலையில், வழக்கறிஞர் ஜோதி பதில் அளித்துள்ளார்.
Advertisment
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜோதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியில், " முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் கொள்ளைக்காரி என நீதிமன்றத் தீர்ப்பில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஜெயலலிதா குறித்து நீதிமன்றம் தெரிவித்ததாக ஆ.ராசா கூறும் கருத்துகள் முற்றிலும் தவறானவை என்று தெரிவித்தார்.
பிரிவு 394(2) ன் சட்டத்தின் கீழ், உயிரிழந்தவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்லக்கூடாது என்பது தான் சட்டவிதி. இது ஏன் ராசாவுக்குத் தெரியாமல் போனது? என்றும் கேள்வி எழுப்பினார்.
சசிகலாவால் ஜெயலலிதாவுக்கு களங்கம். சசிகலா செய்த தவறுக்காக ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டியதாகிவிட்டது. ஜெயலலிதாவின் இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்து வரும் ஆ. ராசாவை கட்சியிலிருந்து உடனடியாக மு.க.ஸ்டாலின் நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.