Advertisment

பேருந்து கட்டண உயர்வு: 27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் வரும் 27ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேருந்து கட்டண உயர்வு: 27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் வரும் 27ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. ஆட்சியில் மாநகர பேருந்துகளில் 2 ரூபாயாக இருந்த குறைந்தபட்சக் கட்டணம் 2011 அதிமுக ஆட்சியில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இப்போது 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. அதேபோல், மாநகர பேருந்துகளில் 12 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் இன்றைக்கு 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாமான்ய மக்கள், சில்லரை வியாபாரிகள், கோயம்பேடு உள்ளிட்ட வணிக வளாகங்களுக்குச் செல்வோர் பயன்படுத்தும் பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது அதிமுக அரசு.

சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. அதே போல் மதுரைக்குச் செல்லும் கட்டணம் 325 ரூபாயிலிருந்து 515 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 695 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. நாகர்கோயிலுக்குச் செல்லும் கட்டணம் 778 ரூபாயாகவும், கோவைக்கு 571 ரூபாயாகவும், தஞ்சாவூருக்கு 439 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டணம் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் குறைந்த பட்சம் 372 ஆகவும், அதிகபட்சமாக 778 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் சாதனப் பேருந்துகளிலோ குறைந்த கட்டணம் 496 ரூபாயாகவும் அதிக பட்ச கட்டணம் 1038 ரூபாயாகவும் உயர்த்தி, அரசு பேருந்துகளின் கட்டணங்கள் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களாக மாற்றப்பட்டுள்ள கொடுமை நடைபெற்றுள்ளது.

அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து விட்ட போக்குவரத்துக் கழகங்களை மீட்கிறேன் என்ற போர்வையில் வருடத்திற்கு 3600 கோடி ரூபாய் பேருந்து கட்டண உயர்வை இரவோடு இரவாக அறிவித்து, வாங்கும் சக்தி குறைந்து தாங்கும் சக்தியற்ற மக்கள்மீது பெரும்சுமையை ஏற்றியிருக்கும் அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனை வலியுறுத்தும் வகையில் தி.மு.க. சார்பில் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கட்சியின் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யவேண்டும். ஒத்த கருத்துடைய தோழமை கட்சிகளும் ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment