சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
கடுமையான சொத்துவரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும், 27-7-2018 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். #PropertyTaxProtest pic.twitter.com/dkTDmOTC9P
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) July 24, 2018
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை, சொத்து வரியை திடீரென உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஊழலில் ஊறித்திளைக்கும் தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.
மத்திய அரசின் மானிய உதவித் தொகைகளைப் பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகைதாரர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது தமிழக அரசு.
எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெறக் கோரியும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 10 மணியளவில், மாவட்டச் செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், நகர செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிக் கழக நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி உட்பட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்" என்று திமுகவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.