கடந்த மூன்று நாட்களாக சென்னையில் விடாது மழை பெய்துவரும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரத்து இல்லத்தில் மழை நீர் புகுந்தது.
வியாழக்கிழமை காலையில் சென்னையின் பல பகுதிகளில் மழை குறைந்து வானம் தெளிவான நிலையில் இருந்தது. இதனால், மழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. பிற்பகலில் ஆரம்பித்த மழை, வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்து வருகிறது. சாந்தோம் நெடுஞ்சாலை, வியாசர்பாடி, தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜி.பி.ரோடு, ராஜீவ் காந்தி சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்தமிழகம் மற்றும் வட கடலோர பகுதிகளில், மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வெள்ள நீர் புகுந்தது.
இதேபோல், சென்னை எத்திராஜ் கல்லூரி விடுதிக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அதில், சிக்கித்தவிக்கும் மாணவிகளை மீட்க அதிகாரிகள் விரைந்துள்ளதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.