DMK High Level Committee Meeting: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கூடியது. இதில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை உயர்நிலை செயல்திட்டக் குழுவை கூட்டி விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (அக்டோபர் 17) காலை 10 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூடியது.
இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தலைமைக்கழக நிர்வாகிகள், சீனியர் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி நவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறக்கப்பட இருக்கிறது. அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா சிலை அருகே கருணாநிதி சிலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த விழாவுக்கு சோனியா காந்தி உள்பட திமுக.வுடன் இணக்கமான நிலையில் உள்ள தலைவர்களை அழைக்க திமுக முடிவு செய்திருக்கிறது. இது குறித்து உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிந்து பகல் 1.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், ஒருவேளை சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வந்தால் அதை சந்திப்பது குறித்தும் பேசினோம். கூட்டணிக் கட்சிகள் குறித்தும் பேசியிருக்கிறோம்.
என்னதான் இந்தக் கூட்டத்தில் பேசினாலும் திமுக செயற்குழு, கழகத்தின் இதயமாக விளங்கும் பொதுக்குழு ஆகியவற்றில் விவாதிக்க இருக்கிறோம். எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்கள்? என எல்லா விஷயங்களும் பேசியிருக்கிறோம். இப்போது அதை விவரமாக கூற முடியாது.’ என்றார் ஸ்டாலின்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.