ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றார். டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்த மருது கணேஷ், பதிவான வாக்குகளில் சுமார் 14 சதவிகிதம் மட்டுமே வாங்கினார். இதனால் இடைத்தேர்தல் வரலாற்றில் திமுக டெப்பாசிட் இழந்த மோசமான சாதனையை படைத்தது.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு 5 தீர்மானங்கள் முழு விவரம்
ஆர்.கே.நகரில் பண வினியோகம் திமுக.வின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், 2016 பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் வாங்கிய வாக்குகளை பெற முடியாதது ஏன்? என்கிற கேள்வி எழுந்தது. அப்போது சிம்லா முத்துச்சோழன் 57,000 வாக்குகள் வாங்கினார். ஆனால் இந்த முறை மருது கணேஷ் பெற்ற வாக்குகள் சுமார் 24,000.
இந்தத் தோல்வி குறித்து விவாதிக்க இன்று (டிசம்பர் 29) சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலைக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகரில் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2ஜி விடுதலையை வரவேற்பது உள்ளிட்ட மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.