திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் நெஞ்சுவலி காரணமாக மரணித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக சென்னை கூடுவாஞ்சேரி போலீசார் இம்ரான், சுல்தான், நசீர், தௌஃபிக் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கார் டிரைவரான லோகேஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்தவா் மஸ்தான் (66). 1995 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினராக இருந்தார். இதைத் தொடா்ந்து, திமுகவில் இணைந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் பொறுப்பு அளிக்கப்பட்டது. மஸ்தான் தனது மனைவி மற்றும் ஒரே மகனுடன் சென்னையில் வசித்து வந்தார். இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.
இதற்கிடையே 22 ஆம் தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு கூடுவாஞ்சேரி அருகே காரில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது மகன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இம்ரான், உறவினர் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தௌஃபிக், லோகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“