ஜன்னல்களை திறந்து வையுங்கள்...
உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் காதுகளுக்கு மட்டும், தொண்டர்கள் போடும் கோஷம் தெரிந்தால், உடல் தானாக எழுந்து வந்துவிடும். அந்தளவிற்கு தங்கள் தலைவரின் மீது, கலைஞரின் மீது, உடன் பிறப்பின் மீது கொண்டிருக்கும் பற்றின்பால், காவேரி மருத்துவமனையே கதி என்று இருக்கின்றனர் திமுக தொண்டர்கள்.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி, தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில், தங்கள் தலைவனின் குரல் கேட்காதா என்று காத்துக் கிடக்கின்றனர். குரல் தேவையில்லை... அசைவை காண்பித்தால் போதும் என்கிற ரீதியிலேயே உள்ளனர் தொண்டர்கள்.
குறிப்பாக, நேற்று இரவு, கருணாநிதியின் உடல்நிலை குறித்த வதந்தி தீயாய் பரவ, அந்த தீயை விட வேகமாக மருத்துவமனைக்கு திரண்டனர் தொண்டர்கள். முடியாது என்று தெரிந்தும், எப்படியாவது தங்கள் தலைவனை பார்த்தே தீருவது என்கிற உறுதியோடு அவர் அங்கு குழுமியிருந்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய கோஷம் அந்த ஏரியாவையே அதிர வைத்தது.
உடன்பிறப்பே! உடன்பிறப்பே! எழுந்து வா உடன்பிறப்பே!
பெண்ணுரிமை நிலைநாட்ட எழுந்துவா உடன்பிறப்பே!
சமூகநீதி நிலைநாட்ட எழுந்தவா உடன்பிறப்பே!
எழுந்து வா! எழுந்து வா! எங்கள் தலைவா எழுந்து வா!
எழுந்து வா! எழுந்து வா! காவேரியை விட்டு எழுந்து வா!
என்று பலரும் பலவாறு கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். இரவு நெடு நேரம் ஆகியும், அவர்களது கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. திமுக நிர்வாகிகளால் கூட அதைக் கட்டுப்படுத்தவில்லை.
யார் சொல்வதையும் தொண்டர்கள் கேட்பதாக இல்லை. அவர்களுக்கு தேவை, கலைஞர், மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே!.