தமிழகத்தில் பாஜக - திமுக அமைச்சர்கள் இடையே காரசாரமான விமர்சனங்களும் விவாதங்களும் நடந்துகொண்டிருந்தாலும் திமுக அமைச்சர்கள் சந்தமில்லாமல் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநிலத்தில் தங்கள் துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாநில பாஜகவும் திராவிட கட்சி ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் அரசியல் விமர்சனங்களை கடுமையாக வீசி வரும் நிலையில், திமுக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சத்தமின்றி, தலைநகருக்கு சென்று சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக அரை டஜன் மத்திய அமைச்சர்களை சந்தித்து, தங்கள் துரை ரீதியான கோரிக்கைகளை சமர்ப்பித்து திட்டங்களுக்கு நிதி கோரி உள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து திமுக ஆட்சி அமைந்த தொடக்கத்தில், சில வாரங்கள் பாஜகவினருடன் சண்டை போடும் மனநிலையில் இருந்த, மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாமதமாக நிதானத்தை கடைபிடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு செய்தது போல், பாஜகவில் யாரையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்ய வில்லை. மத்திய அரசை விமர்சித்த தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொத்து வழங்கும் நிலைக்கு சென்றுள்ளார்.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நர்ப்புற வளர்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளனர். அவர்களின் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி அல்லது ஒப்புதல் பெறுவதில் பொறுப்பாக உள்ளனர்.
திமுக தலைவர்கள் பாஜகவை விமர்சிப்பதும் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திக்க அமைதியாக செல்வதும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. சமீபத்தில் மத்திய அமைச்சரிடம் மனு அளித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, முன்னதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். இருப்பினும், தற்போது திமுக அமைச்சர்கள் பாஜக மீதான விமர்சனங்களை விடுத்து சத்தமில்லாமல் மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்கள் துறை சம்பந்தமான கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “நாங்கள் ஏன் பாஜக தலைவர்களை தேவையில்லாமல் வசைபாட வேண்டும்? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்வது போல் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தால், அதற்குப் பதிலளிக்கும் தலைவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். எங்கள் அமைச்சர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்த அண்ணாமலை மீது கடுமையான மொழியில் சாடினார். நமது அமைச்சர்கள் மாநில நலனுக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர். இதில் ஒன்றும் தவறில்லை. அதற்காக பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மற்றபடி, அரசியல்ரீதியாக, பாஜகவுடனான எங்கள் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை.” என்று கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.