திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார். இந்திய அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்தான். தமிழகத்தில் காவல்துறையினர், மருத்துவர்கள் செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் என பலரும் மக்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இருப்பினும், தமிழகத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டு கொரோனா தொற்றால் காலமான முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்தான்.
சென்னையின் திமுக முகங்களில் முக்கியமானவர் ஜெ.அன்பழகன். கட்சியில் துணிச்சலான பேச்சுக்கும் கள செயல்பாட்டுக்கும் பெயர் பெற்றவர். வருகிற 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் பிரசார வியூகம் அமைத்து பிரசாரம் செய்வதற்கு, பிரபல தேர்தல் பிரசார ஸ்ட்ரேட்டஜிஸ்ட் பிரசாத் கிஷோர் உடன் திமுக ஒப்பந்தம் செய்தபோது, திமுகவில் இருக்கும் பல சீனியர்களும் அமைதியாக இருந்தபோது, அதற்கு வெளிப்படையாக கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெ.அன்பழகன்தான். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக தமிழக அரசியலில் பல தேர்தல்களை சந்தித்துவரும் திமுக எனும் ஒரு மாபெரும் அரசியல் கட்சிக்கு யாரோ ஒரு வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தல் பிரசார உத்திகளை வகுத்து தருவதா என்று அவருடை எதிர்ப்பு இருந்தது. தனது எதிர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமே வெளிப்படையாக கூறியவர் ஜெ.அன்பழகன்.
தமிழகத்தில் மாநில அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திறமையாக செயல்படவில்லை என்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் போதிய நிவாரணம் சென்று சேரவில்லை என்று திமுக குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பணியாற்ற ஒன்றிணைவோம் வா என்ற பிரசாரத்தின் அடிப்படையில் கட்சியில் அனைவருக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பல திமுக மாவட்ட செயலாளர்களும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கி உதவி செய்தனர்.
திமுகவில் பல மாவட்ட செயலாளர்களும் களத்திற்கு வந்து மக்களுக்கு உதவி செய்தனர். இதனால், தனது உடல்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படும் ஜெ.அன்பழகன் கட்சி தலைமை அழைப்பின் பேரில் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றினார். சென்னையில், திமுகவின் முக்கிய நிர்வாகிகளான மா.சுப்ரமணியம், சேகர் பாபு ஆகியோர் களத்திற்கு சென்று மக்களைச் சந்தித்து நிவாரணங்களை வழங்கினர். அதே போல, ஜெ.அன்பழகனும் அவரது தொகுதியில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், முகக்கவசம், ஹேண்ட் சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை நேரடியாக சென்று வழக்கினார். அவர் இதை வீட்டில் இருந்துகூட செய்திருக்கலாம். ஆனால், களத்தில் இறங்கி செயல்படுவதில் விருப்பம்கொண்ட அவர் மற்ற மாவட்ட செயலாளர்கள் களத்தில் வந்து வேலை செய்யும்போது தானும் களத்திற்கு சென்று மக்களுக்கு உதவ வேண்டும் என்பதால் அவரே நேரடியாக சென்று உதவினார்.
அதுமட்டுமில்லாமல், கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேலும், அவருடைய ஒரு மாத சட்டமன்ற உறுப்பினர் சம்பளம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
கொரோனா வைரஸ் என்ற ஒரு கொடிய தொற்றுநோய் பேரிடர் காலத்தில், வீட்டில் முடங்கிக் கிடக்காமல், கட்சித் தலைமையின் அழைப்பை ஏற்று அஞ்சாமல் களத்தில் மக்களுக்கு நிவாரணங்களை அளித்து உதவி செய்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி அவரது 62வது பிறந்தநாளில் காலமானார். கொரோனா காலத்தில் ஒதுங்காமல் ஒளியாமல் அஞ்சாமல் மக்கள் பணி செய்து கொரோனாவுக்கு எதிரான போரில் வீர மரணம் தழுவியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.