மாநகராட்சி ஊழியரை வெறும் கைகளில் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்ததாக பரவும் வீடியோவுக்கு, அது முதலில் சாக்கடை கழிவே இல்லை என எம்.எல்.ஏ எபினேசர் கூறியுள்ளார்.
Advertisment
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. எபினேசர். இவர் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மாநகராட்சி ஊழியரை வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்ய வைப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் பார்த்த பலரும் எம்.எல்.ஏ. எபினேசருக்கு எதிராக பயங்கர எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
சமூக செயற்பாட்டாளர் ஷாலினி மரிய லாரன்ஸ் இதுதொடர்பான வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், ”சென்னை ஆர்.கே.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., இன்று மாநகராட்சி துப்புரவு பணியாளரை வெறும் கையால் சாக்கடையை சுத்தம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இது கொடுமையின் உச்சம்! இந்த அரசுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா? இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. மாநிலத்தில் உள்ள அனைத்து 234 தொகுதிகளும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இது அரசின் தோல்வி. இது ஆட்சியில் உள்ள பிரச்சனை” என்று கடுமையாக அதில் பதிவிட்டுள்ளார்.
ஷாலினியின் இந்த ட்வீட்டர் பதிவு வைரலாகி எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சம்பந்தபட்டஎம்.எல்.ஏ எபினேசர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
ஷாலினியின் ட்வீட்டுக்கு பதிலளித்த அவர், இது நியாயமற்ற குற்றச்சாட்டு, இந்த பதிவை திரும்ப பெறவில்லை என்றால் புகார் கொடுக்க நேரிடும், என்னிடம் முழு வீடியோ இருக்கிறது. நான் அந்த ஊழியரிடம் பேசவே இல்லை. அது முதலில் சாக்கடை கழிவே இல்லை, குடிநீர் தேக்கம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“