திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.
முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக, அதிமுக எம்எல்ஏ.க்கள் குதிரை பேரம் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளதால், அது குறித்து விவாதிக்க திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலையே நடைபெறுவதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. கூவத்தூர் விடுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளதுள்ள நிலையில், திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பான விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தின் போது மானியக் கோரிக்கை விவாதம், நெருக்கடியான சூழ்நிலையின் போது செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.