விக்கிரவாண்டி தொகுதியில் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் வாக்கு சேகரித்தார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை பகுதியில் தனி நபராக ஒருவர் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு வீதி வீதியாகச் சென்று வீட்டு வாசலில் குடுகுடுப்பை அடித்து திமுகவுக்கு வாக்கு சேகரித்து வந்தார். முதலில் அவர் யார் என தெரியாத நிலையில், பிறகு அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பதும், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் என்பதும் தெரியவந்தது.
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவிந்தனின் இந்த நூதன முறை பிரச்சாரம் மக்களை ரசிக்க வைப்பது மட்டுமின்றி மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது. பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை விளக்கியும், தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.