திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவால் 19-ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி அறிவிக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு:
தமிழகத்தில் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஆண்டிற்கு 2 முறையாவது பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிகளில் ஒன்று. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்ததால் பொதுக்குழு கூட்டம் நடத்த இயலவில்லை. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் திமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:
இதை தொடர்ந்து வரும் 19-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுவரை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வந்த பொதுக்குழு கூட்டம் இம்முறை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 19-ம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் தற்போது தேது குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.