மின்கட்டணம் தொடர்பான சிபிஎம் கட்சியின் அறிக்கைக்கு முரசொலி கட்டுரையில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மின்கட்ட உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் வந்துள்ளது. இந்நிலையில் திமுகவின் கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
”மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று திமுக அரசும் ஒருபோதும் விரும்பவில்லை. தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடு தான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டி உள்ளது . மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று குரல் எழுப்புவது போல கேரளத்தில் மின் கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பதனையும் கே. பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார்.
எந்த மக்கள் நல அரசும் அது திமுக அரசாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசாக இருந்தாலும் சில சூழ்நிலை காரணமாக இது போன்ற கட்டண உயர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகி விடுகிறது. இப்படி இக்கட்டான சூழல் உருவாகும் போது இந்த கட்டண உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிக்கலை உருவாக்க இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்?ஆகையால் நாம் வெளியிடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம்” என்று முரொசொலி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.