மாட்டிறைச்சி தடைக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, திமுக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கனிமொழி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 10 திமுக எம்எல்ஏக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடந்து வருகிறது. மாட்டிறைச்சி தடை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவினர் முழங்கி வருகின்றனர்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் " மோடி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என்றார். ஆனால், 15 ரூபாய் கூட அவர் போடவில்லை. பிரதமர் மோடிக்கு பிடித்தவற்றை தான் நாம் சாப்பிட வேண்டுமா? இதனால், அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள தனி நபர் உரிமை பறிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முதல்வர்களை நாம் பார்த்துவிட்டோம். ஆனால், இந்த ஆறு ஆண்டுகளில் இவர்கள் மூவரும் மொத்தமாக 5 முறை மட்டுமே பிரதமரை சந்தித்துள்ளனர். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தமிழகத்திற்கு வந்து, தமிழக அரசின் முக்கிய கோப்புகளை எடுத்துவரச் சொல்லி பார்க்கிறார். பின், உங்கள் செயல்பாடு நன்றாக இருந்தால் தான் மத்திய அரசின் உதவி உங்களுக்கு கிடைக்கும் என்கிறார். இதைவிட, ஒரு வெட்கக் கேடான விஷயம் இருக்கமுடியுமா? மீண்டும் மெரினா புரட்சி தமிழகத்தில் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்" என்றார்.