திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணைய பக்கம் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அவர்கள் முரசொலி இணையத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி. திமுக தலைவர் கருணாநிதியால் 75 ஆண்டுகளுக்கு முன்பு துண்டு பிரசுரமாக தொடங்கப்பட்டது. பின்னர் அது நாளேடாக வளர்ச்சி அடைந்தது. சமீபத்தில்தான் முரசொலி 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முரசொலியின் இணைய தளத்திலும் படிக்க வசதி செய்யப்பட்டது.
இந்நிலையில் முரசொலி இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே, பாதுகாப்பு பற்றி இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர்தான், ஹேக்கர்களின் வேலை இது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசில் முரசொலி நிர்வாகத்தினர் புகார் கொடுத்தனர்.
தகவல் தொழில் நுட்ப பிரிவினர் இணையத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நண்பகலுக்கு பின்னர் மீண்டும் முரசொலி இணைய பக்கம் செயல்பட தொடங்கியது.