வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த விமானத்தில் வந்த இரு ஆப்ரிக்க பெண்கள், ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்றொருவர் நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல், திடகாத்திரமாக காணப்பட்டார்.
இதை கண்காணித்த, சுங்க அதிகாரிகள், அந்த பெண்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து இரு வெளிநாட்டு பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த, டிராலி சூட்கேசை சோதனையிட்டதில், அதன் உள்ளே ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது. அதன் மதிப்பு 70 கோடி ரூபாய்.
இதையடுத்து சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் சென்னையில் யாரிடம் கொடுக்க இந்த போதைப் பொருட்களை கொண்டு வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"