சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான வழித்தடத்தில் நாளை (29ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுவதால் 36 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை (செப்; 29) காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதனால், மேற்கண்ட நேரங்களில் புறநகர் ரயில்களின் சேவை இருமார்க்கத்திலும் நிறுத்தப்படுகிறது. மொத்தம் 36 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. பிற்பகல் 2 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும், 2.10 மணிக்கு வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் முதல் ரயில் சேவை புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.