திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு காளைகளுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த வாலிபர்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை தொடங்கினர்.
ஜல்லிகட்டு காளைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் DYFI சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் இன்று (ஜன.9) துவங்கியது. இந்த இயக்கத்தின்படி கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஆட்சியரிடம் மனுவாக கொடுக்கப்பட்டன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு தமிழகமே போராடி மீட்டுக் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்திட அனுமதிக்க வேண்டுகிறோம், ஓராண்டு காலமாய் காளைகளை தயார் செய்து பல ஆயிரம் ரூபாய் பொருள் செலவு செய்து பாரம்பரியத்தை பாதுகாத்திட காளைகளை வளர்த்து வருகிற எங்களின் கோரிக்கைக்கு மதிப்பளியுங்கள்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஊருக்கு சொந்தமான கோயில் காளைகள் மற்றும் உள்ளூர் காளைகளை முன்னுரிமை கொடுத்து அவிழ்க்கப்படும்போது அதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவாகிவிடும் எனவே வெளியூரிலிருந்து வருகின்ற காளைகளும் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 மணி முதல் 4 மணி வரை 2 மணி நேரம் கூடுதலாக நடத்திட அனுமதி வழங்க வேண்டும்.
இதற்கேற்றார் போல் மருத்துவ கண்காணிப்பு குழு இருப்பதையும், காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதை தடுத்திட தள்ளுவாடி முறையை கைவிடவும், டோக்கன் வரிசைப்படி எவ்வித முறைகேடும் நடைபெறாமல் காளை மாடுகள் அடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளை மாடுகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான டோக்கனுக்கு எந்த விதமான பணமும் பெறாமல் இலவசமாக வழங்குவதை உறுதி செய்திடுக, மேற்கண்ட கோரிக்கைகளை இறுதி செய்த பிறகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதி வழங்கிடுக, என அனைத்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காளைகளுடன் சென்று மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
இந்த இயக்கத்திற்கு DYFI மாவட்ட தலைவர் பா.லெனின் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் தோழர் வெற்றிசெல்வன், மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பாட்ஷா, ரோஜா ராஜன், தர்மா, பிரபாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் திரளாக கலந்துக்கொண்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர்கள் திரண்டு வந்ததால் சிறிது நேரம் அந்தப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் தலையிட்டு ஜல்லிக்கட்டு காளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு மனு கொடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.