தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன்-ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்துப் பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன்-ஆதார் எண் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் வாரிய அலுவலகங்களில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ இணைக்கலாம் என அரசு அறிவித்தது.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்-ஆதார் எண் இணைக்க சிறப்பு கவுன்டர்கள் நேற்று முன்தினம் (நவம்பர் 28) முதல் அமைக்கப்பட்டது. இந்த முகாம் டிசம்பர் 31-வரை நடைபெறும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில், பல இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்களில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 26 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிக மக்கள் வருவதால் கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சில இடங்களில் ஒரே ஒரு கவுன்டர் இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க தாமதம் ஆகிறது. நீண்ட் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அரசு இதை கவனத்தில் கொண்டு கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சர்வர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் மின் இணைப்பு-ஆதார் இணைக்க முற்படுவதால் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் வீட்டிலிருந்து ஆன்லைனில் இணைப்பவர்களும் சிரமத்திற்குள்ளானார்கள். மின் வாரிய சர்வரின் திறனை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil